இலங்கையின் பொருளாதாரத்தை தமது தோள்களில் இன்றளவிலும் சுமந்துகொண்டிருக்கும் மலையக பெருந்தோட்டத் தொழிலாளர்கள், இலங்கை பிரஜைகள் எனக் கூறப்பட்டாலும் இலங்கை பிரஜைகளுக்குரிய முழுமையான உரிமைகள், சலுகைகள் அவர்களுக்கு இன்னும் கிடைக்கப்பெறவில்லை என்பது கசப்பான உண்மையாகும்.

பெருந்தோட்ட தொழிலாளர்கள் மட்டுமல்ல பெருந்தோட்டப் பகுதிகளில் வாழும் மக்கள் இன்னும் தேசிய நீரோட்டத்தில் இணைக்கப்படவில்லை. அரச நிர்வாகப் பொறிமுறையிலிருந்து அவர்கள் தொடர்ச்சியாக ஓரங்கப்பட்டுவரும் நயவஞ்சகம் தொடர் கதையாகவே உள்ளது.

மலையக மக்கள் என்றதுமே சிலருக்கு பெருந்தோட்ட தொழிலாளர்கள் மட்டுமே நினைவுக்கு வருவார்கள்,  அவர்களுக்கு சம்பள பிரச்சினை மட்டுமே உள்ளது எனவும் நினைத்துக்கொண்டிருப்பார்கள். மலையக தமிழர்களும் இந்நாட்டில் தேசிய இனமாக அங்கீகரிக்கப்பட வேண்டியவர்கள், நாட்டில் பல பகுதிகளிலும் வாழ்கின்றனர். அவர்களில் ஒரு பகுதியினரே பெருந்தோட்டங்களில் தொழில் செய்கின்றனர. எனினும், மலையக தமிழர்களின் அரசியல் இருப்பு பெருந்தோட்ட பகுதிகளை அண்டியே உள்ளது என்பதை ஏற்றாக வேண்டும்.

 இந்த பெருந்தோட்ட பகுதிகளில் – குறிப்பாக லயன் குடியிருப்பு பகுதிகளில் வாழும் மக்களே தொடர்ச்சியாக வஞ்சிக்கப்பட்டுவருகின்றனர். முகவரியற்ற சமூகமாகவும் வாழ்ந்துவருகின்றனர். பெருந்தோட்ட பகுதிகளின் காணி உரிமையென்பது அரச வசம் இருக்கின்றபோதிலும் அவற்றை குத்தகைக்கு எடுத்துள்ள கம்பனிகள் மக்களை அடிமைகளாக நடத்துகின்றன.

 வீட்டுக்கு முன்பாக உள்ள மரக்கிளையை வெட்டுவதாக இருந்தால் என்ன, மலசலக்கூடம் அமைப்பதற்காக இருந்தால் என்ன கம்பனிகளிடம் அனுமதிகோரி கைகட்டி நிற்கவேண்டிய நிலை. மறுபுறத்தில் அரசால் வழங்கப்படும் நலன்புரி உதவிகளை பெறுவதிலும் ஆயிரம் தடைகள். குறிப்பாக தோட்டப்பகுதிகளில் உள்ள வீதியைக்கூட அரசால் புனரமைக்க முடியாத நிலை காணப்பட்டது, அவ்வாறு செய்வது சட்டவிரோதமாகக் கருதப்பட்டது. நல்லாட்சியின்போதே பிரதேச சபை சட்டம் மாற்றப்பட்டு அதற்கு தீர்வு காணப்பட்டது.

அதேபோல பெருந்தோட்ட பகுதிகளில் வாழும் மக்கள் எதிர்நோக்கும் உரிமைசார் விடயங்கள், நிர்வாக நெருக்கடிகள் உள்ளிட்டவற்றுக்கு தீர்வைக்காண உரிய பொறிமுறை தொடர்ச்சியாக வலியுறுத்தப்பட்டுவந்தது. அமக்களுக்கு காணி உரிமை வழங்கப்பட வேண்டும் எனவும் கோரிக்கை விடுக்கப்பட்டுவந்தது.

 மலையக பெருந்தோட்ட பகுதிகளில் உள்ள லயன் அறைகளை இல்லாது செய்துவிட்டு, தனி வீடுகளை அமைப்பதாக இருந்தால் அதனை இலகுவில் செய்யலாம். ஆனால் நாட்டின் தற்போதைய பொருளாதார சூழ்நிலையில் அதற்கான சாத்தியம் குறைவு. இந்தியாகூட இதுவரை 14 ஆயிரம் வீடுகளையே முன்மொழிந்துள்ளது.  எனவேதான் காணி உரிமையை வழங்குவது பற்றி அரசாங்கம் பரிசீலித்துவருகின்றது.  

லயன் பகுதிகளானவை, நகர் பகுதிகளில் இருந்து தூர இடங்களிலும், ஒதுக்கப்பட்ட பகுதிகளிலுமே அமைந்துள்ளன. எனவே, அப்பகுதிகளில் அல்லாமல் பொருத்தமான இடங்களில் அவர்களுக்கு காணிகள் வழங்கப்பட வேண்டும். அவ்வாறு காணி வழங்கினால் முடியுமானவர்கள் வீடு கட்டுவார்கள், பொருளாதார நெருக்கடியில் உள்ளவர்களுக்கு இலகு கடன் திட்டங்களை நடைமுறைப்படுத்தலாம். அரச சார்பற்ற நிறுவனங்கள் மற்றும் உலக நாடுகளின் உதவிகளையும் பெறலாம். குறுகிய, மத்திய மற்றும் நீண்டகால அடிப்படையில் அதற்குரிய திட்டங்களை செயற்படுத்தலாம்.

இதற்கிடையில் பெருந்தோட்ட மக்கள் வாழும் பகுதிகளை கிராமங்களாக அறிவிக்கும் அரசாங்கத்தின் உத்தேச திட்டம் தொடர்பில் சில ஐயப்பாடுகள் எழுந்துள்ளன. பெருந்தோட்ட மக்களுக்கு அரச சேவைகள் சென்றடைவதை உறுதிப்படுத்தும் நோக்கிலும், நிர்வாகங்களின் பிடிகளில் இருந்து தோட்டங்களை விடுதலை பெற செய்வதும் இதன் நோக்கம் எனில் அதனை வரவேற்கலாம்.

 மாறாக பெருந்தோட்ட மக்களை தொடர்ந்து லயன்களிலேயே வைத்திருந்து, ஒதுக்கப்பட்ட பகுதிகளில் அவர்களுக்கு காணி உரிமை வழங்குவது இதன்  நோக்கமெனில் அது மலையக தமிழர்களுக்கு இழைக்கப்படும் மற்றுமொரு துரோகமாகவே அமையும். இது விடயத்திலாவது மலையக தலைமைகள், இரு அணிகளாக பிரிந்து நிற்காமல், சமூகத்துக்காக ஓரணியில் திரண்டு,  அரசின் உத்தேச திட்டத்தை மக்கள் நலன்சார்ந்ததாக மாற்றுவதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும்.