'தித்வா' சூறாவளி கோர தாண்டவமாடி விட்டுச் சென்றிருக்கின்றது. டிசம்பர் 8ஆம் திகதி வரையிலான காலத்தகவல்களின்படி 635 பேர் உயிரிழந்துள்ளதோடு 192 காணமல்போயுள்ளனர். இந்த எண்ணிக்கை அடுத்துவரும் நாட்களில் அதிகரிக்கலாம்.
அப்படியிருக்கையில் இலங்கையில் முறைப்படியான அனர்த்த முகாமைத்துவக் கட்டமைப்பு இருப்பதாக கூறப்படுகின்றபோதிலும், தித்வா சூறாவளியின் தாக்கம், குறைந்தது பங்களாதேஷ், இந்தியா, பிலிப்பைன்ஸ் அல்லது ஜப்பான் போன்ற நாடுகள் பின்பற்றும் தேசிய அனர்த்த முகாமை தயார் நிலையுடன் ஒப்பிடுகையில் இலங்கை எந்தளவுக்குப் பின்தங்கியுள்ளது என்பதை மீண்டும் அம்பலப்படுத்தியுள்ளது.
மூன்று தசாப்த உள்நாட்டுப் போர், 2004 ஆழிப்பேரலை, 2019ஈஸ்டர் தாக்குதல்கள், 2022 கொரோனா மற்றும் பொருளாதார வங்குரோத்து, அதன் நீட்சியான அரசியல் குழப்பம் ஆகியவற்றைச் சந்தித்துள்ள தேசத்திற்கு பேரிடியாக அமைந்திருக்கின்றது.
5ஆம் திகதி நவம்பர் மாதம் 2025 அன்றே தித்வா சூறாவளியின் நகர்வுப்பாதை கண்டறியப்பட்டு அதன் 'வலு' கணிக்கப்பட்டும் அதுபற்றிய 'புறக்கணிக்கப்பட்ட' செயற்பாடுகள் இலங்கைக்கு நிச்சயமற்ற எதிர்காலத்தை தோற்றுவித்துள்ளதோடு தீர்க்கமான தருணமாகவும் மாறியுள்ளது.
ஒரு தீவு தேசமாக காலநிலை அபாயங்கள் குறித்து விழிப்புடன் இருக்க வேண்டிது அவசியமாக இருக்கின்றபோதும் அதிகாரப்போராட்டங்கள் நாட்பட்ட தவறான முகாமைத்துவம் ஆகியவற்றால் தொடரும் புறக்கணிப்புக்கள் இந்த அவல நிலைமையை உருவாக்கியுள்ளது என்பதை முதலில் ஏற்றுக்கொள்ள வேண்டியுள்ளது.
இதில், வடக்கிலும், கிழக்கிலும் ஏற்பட்டுள்ள அனர்த்தங்களுக்கு மிகப்பெரும் காரணமாக இருப்பது, அனர்த்தம் பற்றிய முன்னெச்சரிக்கையில் தமிழ் மொழி தொடர்ச்சியாக புறக்கணிப்படுவதாகும்.
அதுமட்டுமன்றி, பேராசிரியர் நாகமுத்து பிரதீபராஜா போன்றவர்கள் சுயமாக ஆராய்ந்து வெளியிடுகின்ற தகவல்களை வடக்கிலும்,கிழக்கிலும் இருக்கும் அரச அதிகாரிகள் எள்ளளவும் பொருட்டாக கொள்வதில்லை என்பது கவலைக்குரிய விடயமாகும்.
கடுங்கன்னாவ நிலச்சரிவு போன்ற சம்பவங்கள், சட்டவிரோத கட்டுமானங்கள், மற்றும் காடழிப்பு ஆகியவற்றால் ஏற்படும் அபாயத்தையும் கடல் மட்டம் உயர்வடைதல் அனர்த்தங்களின் தீவிரத்தினையும் மேலும் அதிகரித்துள்ள நிலையில் மோசமான முகாமைத்துவத்தினால் ஏற்பட்டுள்ள துயரம் பல்வேறு கேள்விகளைத் தொடுத்துள்ளது.
அதுமட்டுமன்றி அண்மைய நாட்களில் நடைபெறுகின்ற கூட்டங்களும் அறிவிப்புக்களும் அனர்த்த முகாமைத்துவத்தில் அரசாங்கக் கட்டமைப்புகளின் செயற்றிறன் இன்மை தெளிவாகிறது.
வளிமண்டலவியல் திணைக்களத்தின் முன்கூட்டிய எச்சரிக்கை புறக்கணிக்கப்பட்டதோடு மட்டுமல்லாமல், அதைத் தெரிவித்த அத்திணைக்களத்தின் பணிப்பாளர் அதுல கருணாநாயக்கவை, நேரடியாக அழைத்த ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க, 'அரசாங்கத்துக்கு களங்கம் விளைவிக்கக்கூடாது எனக்கூறி அவரை மௌனமாக்கியுள்ளார்.
அநுரகுமாரவின் இந்தச் செயற்பாடு தகவல் வெளிப்படைத் தன்மையின்மை அதியுச்ச அரசியல் தலையீட்டைக் காண்பிப்பதற்கு அப்பால் நிறைவேற்றதிகாரம் பலவீனங்களை மறைப்பதற்கு சர்வாதிகாரமாக உருவெடுப்பதையும் வெளிப்படுத்தி நிற்கிறது.
இதைவிட முக்கியமாக, அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் பாதுகாப்பு அமைச்சின் கீழ் செயற்படுகிறது. அப்படியிருந்தும் வினைத்திறனாக செயற்பட்டிருக்க முடிந்திருக்கவில்லை. அதற்கு காரணங்கள் உள்ளன.
பாதுகாப்பு கட்டமைப்புக்கள் அனைத்தும் தமிழர்களை மையப்படுத்திய தவறான மூலோபாயத்துடன் தான் செயற்படுத்தப்படுகின்றன. அவற்றுக்கு அனர்த்தங்களை விடவும் தமிழர்களின் அடக்குமுறைக்குத் தான் முன்னுரிமை அளிக்கப்பட வேண்டும் என்பது ஊட்டி வளர்க்கப்பட்டுள்ளது.
குறிப்பாக, இராணுவத்தின் காலாட்படைப் பிரிவுகளில் 75சதவீதமானவை வடக்கு மற்றும் கிழக்கில் குவிக்கப்பட்டிருப்பதால், மத்திய மற்றும் மேற்குப் பகுதிகளில் பேரிடர் ஏற்படுகின்றபோது, மீட்புப் பணிகளில் ஈடுபடுத்துவதற்கு போதிய படையினர் இருக்கவில்லை.
அமெரிக்கா, இந்தியா, சீனா போன்ற வெளிநாடுகளில் இருந்து மீட்புக் குழுக்கள் வர வேண்டிய கையறுநிலைமை ஏற்பட்டுள்ளது. இதனால் அரசாங்கத்திற்கு வடக்கு,கிழக்கை மையப்படுத்திய படைநிலைப்படுத்தல் மூலோபாயத்தை அரசாங்கம் மீளாய்வு செய்ய வேண்டிய கட்டாயத்தை ஏற்படுத்தியுள்ளது.
ஏனென்றால் அடுத்துவரும் நாட்களில் பொருட்களின் விலை உயர்வு, தட்டுப்பாடு போன்ற காரணங்களால் மக்கள் மத்தியில் இயல்பான பதற்றம் ஏற்படும் சூழல் உருவாகும் போது, அதை முறையாகக் கையாளத் தவறினால், அது கோட்டாபய ராஜபக்ஷவின் ஆட்சியில் ஏற்பட்ட நெருக்கடியை தோற்றுவிப்பதற்கு தாமதமாகப்போவதில்லை.
அரசாங்கம் அந்த நெருப்பாற்றைக் கடக்க வேண்டுமானால், இனவாதச் சிந்தனையுடனான பாதுகாப்பு மூலோபாயத்தை முதலில் கைவிட வேண்டும். பேரிடர் முகாமைத்துவத்தை மறுசீரமைப்புச் செய்ய வேண்டும். அனர்த்த முகாமையை தேசிய முன்னுரிமையாகக் கருதி, அனைத்துத் தரப்பினருடனும் ஒருங்கிணைந்து செயற்பட வேண்டும்.
தற்போது சூறாவளி அனர்த்தங்களால் ஏற்பட்டுள்ள கடினமான சூழலை வெற்றிகரமாகக் கையாள்வது, நீண்டகால ஆட்சிக் கனவுடன் வந்துள்ள தேசிய மக்கள் சக்தி அரசாங்கத்திற்கு அக்கினிப் பரீட்சையாக மாறியுள்ளது.
அனர்த்தங்கள் பற்றிய ஆரம்ப மதிப்பீடுகளின்படி, கிட்டதட்ட 320 பில்லியன் ரூபா வரை அழிவுகள் ஏற்பட்டிருக்கலாம் எனக் கணக்கிடப்பட்டுள்ளது. இதில் உட்கட்டமைப்பு சேதங்கள், உற்பத்தி இழப்புகள் (110 பில்லியன் ரூபா), மற்றும் விவசாய அழிவுகள் (50 பில்லியன் ரூபா) ஆகியவை உள்ளடங்குகின்றன.
குறிப்பாக, வீதி அபிவிருத்தி அதிகாரசபைக்கு சொந்தமான 246 வீதிகள் பாதிக்கப்பட்டுள்ளதுடன், வீதியமைப்பில் உள்ள 22 பாலங்கள் சேதமடைந்துள்ளன. அதில், ஊவா மாகாணத்தில் 6 பாலங்களும், வடக்கு மாகாணத்தில் 4 பாலங்களும், வடமேற்கு மாகாணத்தில் 4 பாலங்களும் சேதமடைந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
அதேபோல், நாட்டின் 1593 கிலோமீற்றர் நீளமுள்ள புகையிரதப் பாதை அமைப்பில் தற்போது 478 கிலோமீற்றர் மட்டுமே பயன்படுத்தக்கூடிய நிலையில் உள்ளது. விவசாய சேவைகள் துறைக்கு சொந்தமான 1,777 குளங்கள், 483 அணைகள் மற்றும் 1,37,265 ஏக்கர் விவசாய நிலம் அழிவடைந்துள்ள நிலையில், நாட்டின் தேசிய உள்நாட்டு உற்பத்தியில் சுமார் 84சதவீதமான பங்களிக்கும் மாவட்டங்கள் பாதிக்கப்பட்டிருப்பதால், இதன் தாக்கம் நீண்ட காலத்திற்கு நீடிக்கும்.
உற்பத்தித் துறையும், விவசாயத் துறையும் பாதிக்கப்பட்டிருப்பதால், உள்நாட்டு நுகர்வும், ஏற்றுமதியும் வெகுவாகக் குறைவடையப்போகின்றது. இதனால் அந்நியச் செலாவணி வருமானம் குறைவதுடன், உணவுப் பற்றாக்குறையைப் போக்குவதற்காக மரக்கறிகள் உள்ளிட்ட அத்தியாவசியப் பொருட்களை இறக்குமதி செய்ய வேண்டிய தவிர்க்க முடியாத சூழல்; ஏற்படப்போகின்றது.
இந்த நிலைமையானது அந்நியச் செலாவணி கையிருப்பை விரைவாகக் கரைத்துவிடும் ஆபத்தை தோற்றுவித்து வருகின்றது. மேலும், வருட இறுதியில் சுற்றுலாப் பயணிகளின் வருகை அதிகமாக இருக்கும் காலகட்டத்தில் அனர்த்தம் நிகழ்ந்திருப்பது, அந்நியச் செலாவணி ஈட்டும் மற்றொரு முக்கியத் துறையைப் வெகுவாகப் பாதிக்கப்போகின்றது.
இந்தக் கட்டமைப்புகளை சீரமைக்கப் பெருமளவில் நிதியை ஒதுக்கீடு செய்ய முடியாத நிலையில் அரசாங்கம் இருப்பதால், குறுகிய காலத்தில் இந்த அழிவுகளிலிருந்து மீள முடியாது என்பது தான் யதார்த்தமாகவுள்ளது.
ஆக, மொத்ததில் இலங்கை மீண்டும் பூச்சியத்திலிருந்து ஆரம்பிக்க வேண்டியிருக்கின்றது. இதற்கு வெளிநாடுகளின் பங்களிப்புக்களும், நிதி நிறுவனங்களின் நன்கொடைகளும் தாராளமாக போதும் என்று கருதினால் அது தான் ஆட்சியாளர்களின் முட்டாள் தனமாக அமையும்.
வெளிநாடுகளின் ஏட்டிக்குப்போட்டியான உதவிகளின் பின்னணியில் ஒரு நிகழ்ச்சி நிரல் இருக்கின்றது. அது உலக நிதி நிறுவனங்களின் நன்கொடைகளுக்கும் பொருந்தும். அந்த நிகழ்ச்சி நிரலில் அநுர அரசு செயற்படுவதற்கு ஒருபோதும் தயாராக இருக்கப்போவதில்லை. அவ்வாறான நிலையில் புதிய இலங்கையை மீளக் கட்டியெழுப்புவதற்கான மூலோபாயம் தான் என்ன?

Comments (0)
Sign in to leave a comment
No comments yet. Be the first to comment!