இலங்கையின் மீதான தனது கேந்திரப் பிடியைத் தளரவிடக்கூடாது என்பதற்காகவும், தனது செல்வாக்கு மண்டலத்திற்குள் சீனாவின் ஊடுருவலைத் தடுக்கவும் இந்திய வெளிவிவகார அமைச்சர் கலாநிதி எஸ்.ஜெய்சங்கர் எவ்வித முன்னறிவிப்புமின்றி, திட்டமிடப்படாத அவசர விஜயத்தை மேற்கொண்டு கடந்த 22ஆம் திகதி மாலை கொழும்பில் கால்பதித்திருந்தார்.
இந்தத் திடீர் விஜயத்திற்குப் பின்னணியில் மற்றொரு முக்கிய காரணியும் இருந்தது. தமிழ்த்தேசியப் பேரவையின் தலைவர் கஜேந்திரகுமார் பொன்னம்பலத்தின் அண்மைக்கால தமிழக விஜயம் மற்றும் அங்கு அவர் ஒற்றையாட்சி அரசியலமைப்புக்கு எதிராகத் திரட்டிய ஆதரவு, இந்தியத் தலைமைக்கு ஒருவித அரசியல் அசௌகரியத்தையும் ஒவ்வாமையையும் ஏற்படுத்தியிருந்தது.
தாயகத் தமிழர் விவகாரத்தில் இந்தியாவின் மத்திய அரசாங்கத்தின் நிலைப்பாட்டைத் தாண்டி, தமிழகத்தின் ஊடாக அழுத்தம் கொடுக்கும் கஜேந்திரகுமாரின் நகர்வுகளைச் நீர்த்துப்போகச் செய்யவும், தமிழர்களின் அரசியல் அபிலாசைகள் மற்றும் பிராந்திய பாதுகாப்பு விவகாரங்களில் டில்லியின் வகிபாகமே முதன்மையானது என்பதை உறுதிப்படுத்தவும் ஜெய்சங்கர் துருப்புச் சீட்டாக பயன்படுத்தப்பட்டுள்ளார்.
கடந்த 23ஆம் திகதி மாலை கொழும்பிலுள்ள இந்திய இல்லத்தில் நடைபெற்ற சந்திப்பில், தமிழரசுக்கட்சி, ஜனநாயகத் தமிழ்த்தேசியக் கூட்டணி மற்றும் தமிழ்த்தேசிய மக்கள் முன்னணி ஆகிய மூன்று முக்கிய அணிகளின் பிரதிநிதிகளும் ஒரே மேசையில் ஜெய்சங்கரைச் சந்தித்தது இராஜதந்திர ரீதியில் மிக முக்கியமானதாகப் பார்க்கப்பட்டது.
வழக்கமாக இவ்வாறான சந்திப்புகளில் ஜெய்சங்கர் மிகவும் இறுக்கமான முகத்துடனும், உணர்ச்சிகளை வெளிப்படுத்தாத ஒரு கறாரான இராஜதந்திரியாகவுமே காட்சியளிப்பார். ஆனால் இம்முறை 'தித்வா' சூறாவளியினால் பாதிக்கப்பட்ட இலங்கைக்கு 450 மில்லியன் டொலர்கள் என்ற பாரிய உதவிப் பொதியுடன் வந்திருந்த அவர், தமிழ்ப் பிரதிநிதிகளுடன் மிகவும் தளர்வாகவும், சகஜமாகவும் உரையாடினார்.
குறிப்பாக, செல்வம் அடைக்கலநாதனின் மீசை குறித்து நகைச்சுவையாகக் குறிப்பிட்டது முதல், பிரதிநிதிகளின் ஒவ்வொரு கேள்விக்கும் விரிவாகப் பதிலளித்தது வரை அவரது அணுகுமுறையில் கணிசமான நெகிழ்வுத்தன்மை தெரிந்தது.
இச்சந்திப்பின் போது பலாலி விமான நிலைய அபிவிருத்தி குறித்து நீண்ட நேரம் விவாதிக்கப்பட்டது. பலாலி விமான நிலையத்தை இலாபகரமானதாக மாற்றுவதற்கு வெறும் ஓடுதள விரிவாக்கம் மட்டும் போதாது என்பதைச் சுட்டிக்காட்டிய அவர், மத்தள விமான நிலையத்தினால் எவ்விதப் பயனுமில்லை என்பதை வெளிப்படையாகவே விமர்சித்தார்.
அதேநேரம், காங்கேசன்துறை துறைமுக அபிவிருத்திப் பணிகள் இந்தியாவின் நிதியுதவியுடன் விரைவில் ஆரம்பிக்கப்படும் என்ற நம்பிக்கையை அவர் ஊட்டினார். அவர் வெளிப்படுத்திய நம்பிக்கையானது அமைச்சர் பிமல் ரத்நாயக்கவிடமிருந்து அந்த அமைச்சு பிடுங்கி மாற்றப்பட்டமைக்கான காரணத்தையும் உறுதிப்படுத்தியுள்ளது.
இலங்கை - இந்திய மீனவர் பிரச்சினை குறித்துப் பேசப்பட்டபோது, யாழ்ப்பாண இந்தியத் தூதரகத்திற்கு முன்னால் நடத்தப்பட்ட போராட்டத்தின் பின்னணியில் 'தேசிய மக்கள் சக்தி' இருக்கக்கூடும் என்ற சந்தேகத்தை சுரேஷ் பிரேமசந்திரன் உள்ளிட்டோர் முன்வைத்தனர்.
இதனைத் தீவிரமாக எடுத்துக்கொண்ட ஜெய்சங்கர், இது குறித்து விசேட அவதானம் செலுத்துமாறு உயர்ஸ்தானிகர் சந்தோஷ் ஜாவிற்கு அங்கேயே உத்தரவிட்டார். மேலும், ஜே.வி.பி-யின் பொதுச்செயலாளர் ரில்வின் சில்வாவின் இந்திய விஜயம் இயற்கை அனர்த்தத்தினால் பிற்போடப்பட்டுள்ளதை உறுதிப்படுத்திய அவர், மாகாண சபை முறையை முடக்கும் எத்தகைய நகர்வுகளையும் இந்தியா உன்னிப்பாகக் கவனிக்கும் என்ற சமிக்ஞையையும் வெளிப்படுத்தினார்.
தற்போதைய பேரிடர் சூழலை ஒரு காரணமாகக் காட்டி, தேர்தலுக்காக ஒதுக்கப்பட வேண்டிய 11 பில்லியன் ரூபாவைச் சேமிக்க அரசாங்கம் தேர்தலை ஒத்திவைக்கலாம் என்ற அச்சத்தைத் தமிழ் தலைவர்கள் வெளிப்படுத்தினர். 13ஆவது திருத்தம் மற்றும் மாகாண சபை முறைமை குறித்து இந்தியா தனது அழுத்தத்தைத் தொடரும் என்பதை அவர் இம்முறை உணர்ச்சிகரமான முகபாவங்களுடன் உறுதிப்படுத்தினார்.
சீனா வெறும் வாக்குறுதிகளுடனும் 82ஆயிரம் டொலர்கள் வரையான மிகச்சிறிய கொடைகளுடனும் வந்து செல்லும் வேளையில், இந்தியா 450 மில்லியன் டொலர்கள் மற்றும் ஏற்கனவே வழங்கிய 4 பில்லியன் டொலர்கள் கடன் மறுசீரமைப்பு போன்ற காத்திரமான உதவிகள் மூலம் தன்னை 'உண்மையான நண்பன்' என்று நிரூபித்து மார்பு தட்டிக்கொண்டிருக்கின்றது.
இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி அனுப்பிய 'தோளோடு தோள் நிற்போம்' என்ற செய்தி, இலங்கைக்கு இன்னொரு தரப்பு தோள்கொடுக்க வேண்டிய அவசியம் இல்லை என்ற மறைமுகமான எச்சரிக்கையையும் சீனாவிற்கு விடுத்துள்ளது.
முதலீட்டு ரீதியாக சீனாவின் ஆதிக்கம் இருந்தாலும், நெருக்கடியான காலங்களில் சீனா கஞ்சத்தனத்துடன் நடந்து கொள்வதையும், இந்தியா தார்மீக உரிமையுடன் ஓடி வந்து உதவுவதையும் இந்த பேரிடர் காலம் மீண்டும் நிரூபித்துள்ளது. ஆனால் சீனா அமைதியாக இருப்பதற்கும் காரணங்கள் இல்லாமலில்லை.
அதேநேரம் ஜெய்சங்கரின் இந்தத் திடுதிப்பு விஜயமானது, இலங்கையின் புதிய அரசாங்கத்தையும், வடக்கு-கிழக்கு அரசியல் தரப்புகளையும் ஒரே நேரத்தில் இந்தியாவின் மேலாதிக்கப் பார்வையின் கீழ் கொண்டு வருவதற்கான ஒரு தீர்க்கமான இராஜதந்திர நகர்வாகும்.
பந்து இப்போது சீனாவின் கையில் உள்ளது. ஆனால் இந்தியா தனது பிடியை எக்காரணம் கொண்டும் தளர்த்தத் தயாராக இல்லை என்பதையே ஜெய்சங்கரின் பயணம் ஆழமாகப் பதிவு வெளிப்படுத்துகின்றது.
இலங்கை அரசியலில் துருவநிலைப்பட்டுள்ள சமூகங்களின் கரிசனைகளுக்கும் இந்தியா முக்கியத்துவம் கொடுக்கிறது என்பதை இந்த விஜயம் உறுதிப்படுத்தியுள்ளது. பொருளாதார நெருக்கடியின் போதும், தற்போது பேரிடர் நெருக்கடியின் போதும் இந்தியா காட்டியுள்ள தாராளமயமான போக்கு, சீனாவின் வெறும் 'முதலீட்டுத் திட்டங்களுக்கு' அப்பாற்பட்ட ஒரு மனிதாபிமான மற்றும் பாதுகாப்பு அரணாக இந்தியாவை இலங்கையர்கள் பார்க்க வழிவகுத்துள்ளது.
கஜேந்திரகுமார் பொன்னம்பலம் போன்ற தலைவர்களின் மாற்று நகர்வுகளும், சீனாவின் மூலோபாயத் திட்டங்களும் இந்தியாவின் ஒருமைப்பாட்டுக்கு சவாலாக அமையாதவாறு ஜெய்சங்கர் ஊடாக டில்லி தனது காய்களை நகர்த்தியுள்ளாது.
அந்த வகையில் பார்க்கின்றபோது ஜெய்சங்கரின் விஜயமானது வெறுமனே நிவாரண விஜயம் அல்ல, மாறாக இந்தியப் பெருங்கடல் பிராந்தியத்தில் தனது ஆதிக்கத்தை மீண்டும் ஒருமுறை நிலைநிறுத்துவதை உறுதிப்படுத்துவற்கான விஜயம்.
அந்த நகர்வில் இந்தியா வெற்றி பெற்றதா என்பதைப் பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டியுள்ளது. ஏனென்றால் இலங்கைக்கு விஜயம் செய்துள்ள சீன கம்யூனிஸ்ட் கட்சியின் 20ஆவது மத்திய குழுவின் உறுப்பினரும், ஷிசாங் தன்னாட்சி பிராந்திய கம்யூனிஸ்ட் கட்சி குழுவின் செயலாளருமான வாங் ஜுன்செங் இறுதியாகச் சந்தித்த ஜே.வி.பி.யின் பொதுச்செயலாளரிடத்தில் உடன்பட்ட ஒப்பந்த விடயங்களை நடைமுறைப்படுத்துவதற்கு நடவடிக்கை எடுங்கள் என்று நேரடியாகவே கூறிவிட்டுச் சென்றிருக்கின்றார்.
இந்தக் கூற்றுக்களை அவர் பகிரங்க வெளியில் உரையாற்றுகின்றபோதோ, ஜனாதிபதி அநுரவைச் சந்தத்தபோதே கூறியிருக்கவில்லை. அப்போதெல்லாம் இலங்கையின் மீள் எழுச்சியில் தாம் உடனிருப்போம் என்று தான் கூறியிருந்தார். ஈற்றில் தமது விடயங்களை முன்னகர்த்துமாறு வலியுறுத்துவிட்டுச் சென்றிருக்கின்றார்.
அவ்விதமான நிலைமைகளை பார்க்கின்றபோது இந்தியா தனது பிடியைத் தக்கவைப்பதற்கான நகர்வுகளை விடவும் சீனாவின் எதிர்காலம் குறித்த சிந்தனையும் தீர்க்கமான அழுத்தங்களும் ஒருபடி மேலே தான் உள்ளது. ஆகவே சீனாவின் அடுத்து வருகின்ற நகர்வுகள் ஒற்றைக்காலில் இரைக்காக காத்திருக்கும் கொக்கைப் போன்று தான் இருக்கும். அதுவரையில் இந்தியாவுக்கு சுயகாப்பு வெற்றி தான்.
Comments (0)
Sign in to leave a comment
No comments yet. Be the first to comment!