இலங்கையின் நீண்டகால இனப்பிரச்சினைக்கு நிரந்தரத் தீர்வைக் காண்பது, நாட்டின் நிலையான அபிவிருத்திக்கும், தேசிய ஒருமைப்பாட்டிற்கும் இன்றியமையாததாகும்.

இத்தகையதொரு பின்புலத்தில், தேசிய மக்கள் சக்தியின் பொதுச்செயலாளர் கலாநிதி நிஹால் அபேசிங்க, 2015 – 2019 ஆம் ஆண்டு வரையான காலப்பகுதியில் தயாரிக்கப்பட்ட புதிய அரசியலமைப்பு வரைவு மீளக்கொண்டுவரப்பட்டு, அரசியல் கட்சிகளால் சமர்ப்பிக்கப்பட்ட திருத்த முன்மொழிவுகள் ஆராயப்பட்டு வருவதாக சுவிஸ்லாந்தில் அண்மையில் இடம்பெற்ற செயலமர்வில் தெரிவித்தார்.

இந்த அறிவிப்பு, அரசாங்கம் தேசிய இனப்பிரச்சினைக்கு நிரந்தரமான அரசியல் தீர்வைக் காண்பதை நோக்கி நகர்கிறது என்ற தோற்றப்பாட்டைக் கொடுத்தாலும், தமிழ்த் தேசியக் கட்சிகளின் கருத்துக்கள் நிராகரிக்கப்படுவது ஆரோக்கியமானதல்ல என்ற விவாதத்தை உடனடியாக ஏற்படுத்தியுள்ளது.

சுவிஸ்லாந்தில் இடம்பெற்ற இலங்கை – சுவிஸ்லாந்து பாராளுமன்ற நட்புறவு சங்கத்தின் செயலமர்வில், இனப்பிரச்சினை மற்றும் அரசியல் தீர்வு குறித்து தேசிய மக்கள் சக்தியின் பொதுச் செயலாளர் கலாநிதி நிஹால் அபேசிங்க விளக்கமளித்தார்.

வடக்கு, கிழக்கு மாகாண தமிழ்மக்கள் தமது அரசாங்கத்துக்கு ஆணை வழங்கியிருப்பதாகவும், அதனடிப்படையில் இனப்பிரச்சினைக்குத் தீர்வு காணப்படும் எனவும் அவர் குறிப்பிட்டது, ஆளும் தரப்பின் அரசியல் நிலைப்பாட்டை வெளிப்படுத்தியது.

எனினும், இச்செயலமர்வில் எதிரணிகளில் தமிழ்த்தேசிய மக்கள் முன்னணியின் சார்பில் பங்கேற்ற அதன் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான கஜேந்திரகுமார் பொன்னம்பலம் இந்த வாதத்தை முழுமையாக நிராகரித்தார்.

தமிழ் மக்கள் தேசிய மக்கள் சக்தி அரசாங்கத்துக்கு ஆணை வழங்கினார்கள் என்ற வாதம், தமிழ்த் தேசியக் கட்சிகளுடன் பேசத் தேவையில்லை என்ற தொனியைக் கொண்டிருப்பதாக அவர் சுட்டிக்காட்டினார்.

யதார்த்தம் வேறு என்பதை விளக்கிய கஜேந்திரகுமார் பொன்னம்பலம், வடக்கு, கிழக்கு மாகாணங்களைப் பிரதிநிதித்துவப்படுத்தும் மொத்த தமிழ் பாராளுமன்ற உறுப்பினர்களின் எண்ணிக்கை 19 ஆகும். அவர்களில் 8 பேர் மட்டுமே தேசிய மக்கள் சக்தியைச் சேர்ந்தவர்கள். எஞ்சிய 11 பேரும் எதிரணியில் உள்ள, சமஷ்டியை வலியுறுத்தும் தமிழ்த் தேசிய அரசியல் கட்சிகளைப் பிரதிநிதித்துவப்படுத்துபவர்கள் என்றும், இதனால் அறுதிப் பெரும்பான்மை ஆளும் தரப்பு வசமில்லை என்றும் அவர் சுட்டிக்காட்டினார்.

மேலும், 2015 – 2019 ஆம் ஆண்டு வரையான காலப்பகுதியில் தயாரிக்கப்பட்ட அரசியலமைப்பு வரைவைக் கொண்டுவருவதற்கான ஆணை தேசிய மக்கள் சக்தி அரசாங்கத்துக்கு இல்லை என்றும் அவர் மறுதலித்தார். இந்த முரண்பாடுகள், புதிய அரசியலமைப்புச் செயற்பாடு அவசர கதியில், அல்லது உண்மையான தமிழ் மக்களின் அரசியல் பிரதிநிதிகளின் பங்களிப்பின்றி முன்னெடுக்கப்படுவதாகக் கருத இடமளிக்கிறது.

எந்தவொரு அரசியல் தீர்வும் நீடித்ததாகவும், அனைத்து சமூகத்தினராலும் ஏற்றுக்கொள்ளப்பட்டதாகவும் இருக்க வேண்டுமானால், அனைத்துத் தரப்பினருடனும், குறிப்பாக தமிழ்த் தேசிய அரசியல் கட்சிகளுடன் வெளிப்படையான, நேர்மையான உரையாடல் அத்தியாவசியமாகும். அரசியலமைப்பு என்பது ஒட்டுமொத்த தேசத்தின் ஆவணமாகும்; அதுவொரு தரப்பின் விருப்புக்கு மட்டும் அமையாமல், அனைத்து மக்களினதும் அபிலாஷைகளைப் பூர்த்தி செய்ய வேண்டும்.

இவ்வாறான நிலையில், ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க ஐக்கிய நாடுகள் சபையின் 80ஆவது பொதுச்சபை அமர்வில் உரையாற்றியபோது, உலகளாவிய வறுமை ஒழிப்பு, ஊழலுக்கு எதிரான போராட்டம், போதைப்பொருள் ஒழிப்பு, காஸா போர்நிறுத்தம் மற்றும் எதிர்கால சந்ததியினருக்குப் பாதுகாப்பான உலகை உருவாக்குதல் போன்ற சர்வதேச பிரச்சினைகளுக்கு முக்கியத்துவம் கொடுத்தார்.

ஆயினும், இலங்கையின் மிக முக்கியமான உள்நாட்டுப் பிரச்சினையான தேசிய இனப்பிரச்சினைக்கான தீர்வு தொடர்பில் அவர் ஐ.நா. சபையில் மௌனம் காத்திருந்தது விமர்சனத்துக்குரியதாகிறது.

சர்வதேச அரங்கில் முக்கியத்துவம் கொடுத்துப் பேசவேண்டிய இந்த விடயத்தை ஐ.நா.சபையில் தவிர்த்திருந்த அவர், பின்னர் ஜப்பானிய அரசாங்கத்தின் அழைப்பின் பேரில் சென்றபோது, அங்கு வசிக்கும் இலங்கை சமூகத்தினர் மத்தியில் உரையாற்றுகையில், தேசிய இனப்பிரச்சினைக்கான தீர்வு குறித்துப் நீண்ட விளக்கமளித்துள்ளார்.

குறிப்பாக, அவர் ஆற்றிய உரையில், வடக்கு மாகாணமே யுத்தத்தால் மிக மோசமாக அழிவடைந்தது. அந்த மக்கள் கொடுமையாக பாதிக்கப்பட்டார்கள். இதுவே உண்மை, என்று ஒப்புக்கொண்டதுடன், அரசியலமைப்பு ரீதியில் தமிழ் மக்களுக்கு காணப்படும் பிரச்சினைகளுக்கு தீர்வு பெற்றுக்கொடுப்பேன் என்றும் உறுதி பூண்டார்.

அத்தோடு,  பாதுகாப்பு வழிமுறைகளுக்கு அமைய வடக்கில் உள்ள இராணுவ முகாம்கள் அகற்றப்படும் என்றும் வடக்கு மக்கள் மீண்டும் யுத்தம் பற்றி சிந்திக்கமாட்டார்கள், அவர்கள் அமைதியாக வாழ்வதற்கே விரும்புகிறார்கள் என்றும் அவர் குறிப்பிட்டார்.

வடக்கு மக்களின் துன்பத்தை ஒப்புக்கொண்டமை, இராணுவ முகாம்கள் அகற்றம் மற்றும் அரசியல் தீர்வு குறித்த உறுதிமொழிகள் வரவேற்கத்தக்கவை. எனினும், தமிழர் தேசிய இனப்பிரச்சினை குறித்த தனது நிலைப்பாட்டை சர்வதேச அழுத்தங்கள் மற்றும் கண்காணிப்புக்களுக்கு முக்கியத்துவம் உள்ள ஐ.நா. சபையில் வெளிப்படையாகப் பேசாமல், ஜப்பானில் உள்ள புலம்பெயர் சமூகத்திடம் மட்டும் பேசியமை அதிருப்தியான விடயமாகும்.

சர்வதேச சமூகத்தின் முன்னிலையில், தமிழர் தேசிய இனப்பிரச்சினையின் தீவிரத்தையும் அதற்கான தீர்வு குறித்த அரசாங்கத்தின் தெளிவான நிலைப்பாட்டையும் முன்வைக்க ஜனாதிபதி தவறியது, அரசியல் தீர்வின் நேர்மை மற்றும் உறுதிப்பாடு குறித்துக் கேள்விகளை எழுப்புகிறது.

புதிய அரசியலமைப்புச் செயற்பாட்டை முன்னெடுப்பதாக ஆளுந்தரப்பு கூறும் நிலையில், ஜனாதிபதியின் இந்த முரண்பட்ட அணுகுமுறை இனப்பிரச்சினைக்கான தீர்வு குறித்த அரசாங்கத்தின் உறுதிப்பாட்டில் நம்பகத்தன்மையை உறுதிப்படுத்துவது சவாலாக அமைகிறது.

நீடித்த, நேர்மையான அரசியல் தீர்வுக்கான பாதைக்கு, தெளிவான உள்நாட்டுப் பங்களிப்புடன், சர்வதேச சமூகத்தின் முன்னிலையிலும் அஞ்சாத வெளிப்படைத்தன்மை அத்தியாவசியமானது.

இவ்வாறான நிலையில் இலங்கைத் தமிழரசுக்கட்சி, தேர்தல் வாக்குறுதிக்கு அமைவாக இனப்பிரச்சினைக்கான தீர்வு குறித்த பேச்சுக்களை ஆரம்பிக்குமாறும் வசதியான நேரத்தில் ஜனாதிபதியைச் சந்திக்கத் தயாராக இருப்பதாகவும் அறிவித்துள்ளது.

இதற்கு ஜனாதிபதி அநுர எவ்வாறு பதிலளிக்கப்போகின்றார் என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டியுள்ளது.